"மாநில உரிமைக் காப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வி" - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி தமிழ்நாடு அரசு படுதோல்வியடைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. ஜூலை 13ம் தேதி வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை. இது தமிழ்நாட்டுக்கு பெரும் பின்னடைவு ஆகும்.
ஒருங்கிணைந்த கல்வித்திட்ட நிதியை பெறுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கு தமிழ்நாடு அரசு தான் காரணமாகும். இந்த சிக்கலில் தமிழ்நாட்டிற்கு எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய நீதி இப்போது வரை தள்ளிக் கொண்டே போவதற்கு காரணம், தமிழ்நாடு அரசின் சார்பில் காட்டப்பட்ட அலட்சியமும், அடுக்கடுக்காக இழைக்கப்பட்ட தவறுகளும் தான்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி: ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு - மாநில உரிமைக் காப்பதில் படுதோல்வி!
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2151.59 கோடியை மத்திய அரசு வழங்க மறுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க…
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) June 10, 2025
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான 3 மாதங்களில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் முதல் பாதி வரை வழங்காத நிலையில், அதைக் கண்டித்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மத்திய அரசிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
அதன்பின் தொடர்ந்து வெளியிட்ட அனைத்து அறிக்கைகளிலும் இதையே வலியுறுத்தியிருந்தேன். கடந்த மே 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் ஒருமுறை இந்த யோசனையை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழ்நாடு அரசோ, அதை மதித்து நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக வீண் அரசியலைச் செய்து காலத்தைக் கடத்தியது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்ததற்கும் இது தான் காரணம் ஆகும். நேற்றைய வழக்கு விசாரணையின் போது, எவ்வளவு காலமாக மத்திய அரசின் நிதி வரவில்லை என்றும், எப்போது வழக்கு தொடர்ந்தீர்கள் என்றும் உச்சநீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால நீதிபதி வினா எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர், கடந்த ஆண்டு முதலே நிதி வரவில்லை என்றும், கடந்த மே மாதம் 20-ஆம் தேதி தான் வழக்குத் தொடர்ந்ததாகவும் பதிலளித்தார். அதனடிப்படையில் தான் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியவாறு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே தமிழ்நாடு அரசின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தால் அடுத்த சில மாதங்களில் இந்த வழக்கில் தீர்ப்பு வந்திருக்கும்; தமிழ்நாட்டிற்கான நிதியும் கிடைத்திருக்கும். ஆனால், மக்கள் நலனை விட, அரசியல் லாபம் தேடுவதில் தான் திமுக அரசு தீவிரம் காட்டியது.
அதனால் தான் 43 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, ஒரு லட்சம் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வழங்குவதையும் தமிழ்நாடு அரசு தடுத்து விட்டது. இப்படியாக தமிழ்நாடு அரசின் செயல்களால் பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. மாநிலங்களின் உரிமைகளை மீட்பது தான் தங்களின் லட்சியம் என்று கூறித் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், மாநில உரிமைகளைக் காப்பதற்காக எந்த நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை.
சுமார் ஓராண்டு காலம் உறங்கிக் கொண்டிருந்து, மிகவும் தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் நிதியைப் பெறுவதில் தோல்வியடைந்து விட்டது. தமிழ்நாடு அரசு உடனடியாக மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகி, வழக்கை விரைவாக விசாரித்து தமிழ்நாட்டிற்கு நிதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25% இடங்களில் ஏழைக் குழந்தைகளைச் சேர்க்கவும், அவர்களுக்கு கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.