For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு அரசு விருதுகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவிப்பு!

08:03 PM Jan 13, 2024 IST | Web Editor
தமிழ்நாடு அரசு விருதுகள்   முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி கௌரவிப்பு
Advertisement

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023 மற்றும் 2024-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு விருதுகளை வழங்கினார்.

Advertisement

சென்னை தலைமை செயலகத்தில் 2023 மற்றும் 2024-ம் ஆண்டிற்கான, சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது, டாக்டர் அம்பேத்கர் விருது மற்றும் பேரறிஞர் அண்ணா விருது உட்பட 9 வகை விருதுகளை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு வழங்கி கௌரவித்தார். மேலும் விருதாளர்களுக்கு 5 லட்சம் ரூபாயுடன், தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கினார்.

2023-ம் ஆண்டிற்கான விருது

தந்தை பெரியார் விருது

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும். சமூகநீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், சமூக நீதிக்கான “தந்தை பெரியார் விருதினை” வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், தந்தை பெரியார் விருது சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப. வீரபாண்டியனுக்கு வழங்கப்பட்டது.

டாக்டர் அம்பேத்கார் விருது

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் “டாக்டர் அம்பேத்கர் விருது” வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பி.சண்முகத்திற்கு வழங்கப்பட்டது.

பேரறிஞர் அண்ணா விருது

பேரறிஞர் அண்ணாவின் முதன்மைத் தொண்டர் என பாராட்டப்பட்டவரும் 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான பத்தமடை பரமசிவத்திற்கு வழங்கப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜர் விருது

தேசியத் தமிழ்க் கவிஞர் பேராயம், சிலப்புச் செல்வர் ம.பொ.சியை கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான உ பலராமனுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்பட்டது.

மகாகவி பாரதியார் விருது

தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்கு கவிதைகளைப் படைத்த கவிஞர் பழனி பாரதிக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசன் விருது

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் முத்தரசனாரின் "கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்" என்று பாராட்டைப் பெற்றவரும் தமது 92வது வயதிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ்ப்பணியாற்றி வரும் கவிஞர் முத்தரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.

தமிழ் தென்றல் திருவிக விருது

பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களை திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான ஜெயசீல ஸ்டீபனுக்கு தமிழ் தென்றல் திருவிக விருது வழங்கப்பட்டது.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது

தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் இரா.கருணாநிதிக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது வழங்கப்பட்டது.

2024-ம் ஆண்டிற்கான விருது

திருவள்ளுவர் விருது

பள்ளி மாணவர்களுக்கு 1983-ம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவச் செல்வங்களுக்கு விழா எடுத்து ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கி, உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இருமுறை நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வரும் பாலமுருகனடிமை சுவாமிக்கு திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது.

Tags :
Advertisement