டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார வாகன கலை குழு முதலிடம் பிடித்து அசத்தல்!
டெல்லி குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அலங்கார வாகன கலை குழுவினருக்கு முதல் இடத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் ஜன.26-ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவரால் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொண்டார். அன்றைய தினம் பல்வேறு நிகழ்வுகள் கோலாகலாக நடந்தன. குடியரசு தின விழாவின் போது அரசுத் துறைகளின் நலத்திட்டங்கள், சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த நிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் முகாமில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு அலங்கார வாகன கலை குழுவினருக்கு முதல் இடத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இதையும் படியுங்கள்: மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு!
"டெல்லியில் 2024 ஜனவரி 26 அன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பின் போது பங்கு கொண்ட தமிழ்நாடு மாநில அலங்கார வாகனத்திற்கு மிகச் சிறந்த அலங்கார வாகனத்திற்கான மூன்றாமிடத்துக்கான விருதினை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
டெல்லி இராணுவ கன்டோன்மெண்டில் அமைந்துள்ள ராஷ்ட்ரிய ரங்க் சாலா முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட் தமிழ்நாடு மாநிலத்திற்கு மிகச் சிறந்த அலங்கார வாகனத்திற்கான மூன்றாமிடத்துக்கான விருது மற்றும் பாராட்டுப் பத்திரத்தினை வழங்கினார்.
இவ்விருதினை தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையாளர் ஆஷிஷ் சாட்டர்ஜி பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சக இணைச் செயலாளர் அமிதாப்பிரசாத், இயக்குநர் எம்.பி.குப்தா I.T.S., மற்றும் சார்புச் செயலாளர் அசோக் பாண்டே ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், கடந்த ஜன.21 அன்று குடியரசு தின விழா அணி வகுப்பில் பங்குபெறும் 16 மாநிலங்களுக்கிடையே டெல்லி ராணுவ வளாக ராஷ்ட்ரிய ரங்க் சாலா முகாமில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு அலங்கார வாகன கலை குழுவினருக்கு முதல் இடத்திற்கான விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாண்புமிகு ஒன்றிய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அவர்கள், குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கு கொண்ட தமிழ்நாடு மாநிலத்தின் அலங்கார வாகனத்திற்கு மூன்றாம் இடத்திற்கான விருதினை தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையாளர் அவர்களிடம் வழங்கினார்.#CMMKSTALIN | #TNDIPR |@mkstalin pic.twitter.com/WZp1iWntVZ
— TN DIPR (@TNDIPRNEWS) January 30, 2024