"அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது" - ஜி.கே. வாசன் அறிவிப்பு
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் விவகாரம் தொடர்பாக மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த கூட்டத்திற்கு அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, தவெக உள்பட தமிழநாட்டில் உள்ள 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
"தமிழ்நாடு அரசு கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்காது. மூம்மொழிக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமான மத்திய அரசின் கல்வி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதராவாகவே இருக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் எந்த அதிகார பூர்வமான அறிவிப்பும் வராத நிலையில், தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.
தமிழக அரசு கூட்டியிருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்காது.
மூம்மொழிக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமான மத்திய அரசின் கல்வி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பெற்றோர்களும், மாணவர்களும் ஆதராவாகவே இருக்கிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்பு…
— G.K.Vasan (@GK__Vasan) March 2, 2025
கடந்த வாரம் 25.02.2025 தமிழ்நாட்டிற்கு வருகை தந்த, மத்திய உள்துறை அமைச்சர், தொகுதி மறுசீரமைப்பில் எந்த நிலைப்பாட்டையும் மத்திய அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்படி இருந்தாலும் கூட தமிழ்நாட்டிற்கு நாடாளுமன்ற தொகுதிகள் கூடுமே தவிர குறையாது என்றும் தெளிவுப்படக் கூறியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து வளர்ந்துகொண்டு இருக்கும் பல்வேறு தீர்க்கப்படாத பிரச்னைகள் இருக்கும் பொழுது, அதையெல்லாம் மக்களிடம் இருந்து திசைத் திருப்பவே இக்கூட்டம் நடைபெறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கருதுகிறது. வருகிற மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) பங்கேற்கவில்லை"
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக நாம் தமிழா் கட்சி, புதிய தமிழகம் கட்சி அறிவித்திருப்பதும், பங்கேற்பதாக அதிகமுகவும் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.