ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்!
இந்தியாவில் முந்திரி ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் ரூ.10 கோடி செலவில் முந்திரி வாரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர்,
“தமிழ்நாட்டில் அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டங்களில் முந்திரி அதிகமாக பயிரிடப்படுகிறது. முந்திரி தமிழ்நாட்டில் இரண்டு லட்சத்து ஒன்பது ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு ஆண்டிற்கு 43 ஆயிரத்து 460 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தியாவில், தமிழ்நாடு முந்திரி உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்தாலும் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, முந்திரியின் பரப்பினை உயர்த்தி, உற்பத்தியை அதிகரிக்கவும், முந்திரி சார் தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கவும், முந்திரித் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கவும், 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், தமிழ்நாடு முந்திரி வாரியம் (Tamil Nadu Cashew Board) ஏற்படுத்தப்படும்.
இதனால் முந்திரி சாகுபடி செய்யும் உழவர்களும். அதனைச் சார்ந்த தொழில் செய்யும் கிராமப்புர மக்களும் அதிகளவில் பயனடைவார்கள்” என தெரிவித்தார்.
அதுபோல தமிழ்நாட்டின் மாநில மரமான பனை சாகுபடியை ஊக்குவிக்க, பனை மேம்பாட்டு இயக்கத்தில் ரூ.1 கோடியே 65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர்,
நமது மாநில மரமான பனை மரம் தமிழர்களின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மைக்கு உதவும் முக்கியத்துவம் வாய்ந்த, பனைமரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு நான்கு ஆண்டுகளாகப் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025-2026 ஆம் ஆண்டில் பனை சாகுபடியை ஊக்குவிக்க 10 இலட்சம் பனை விதைகள், பனை மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் கூடங்கள், மதிப்புக்கூட்டுதல் பயிற்சி ஆகிய இனங்களுக்கு, பனை மேம்பாட்டு இயக்கத்தில் ஒரு கோடியே 65 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 20 ஆயிரம் நபர்கள் பயனடைவார்கள்” என தெரிவித்தார்.