தமிழ்நாடு பட்ஜெட் 2025-26 : தொழில் வளர்ச்சியை மேம்படுத்த 12 புதிய அறிவிப்புகள்!
தமிழ்நாடு இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. மின்னணுப் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை பெற்றிட மாநில அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தற்போது 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பல அறிவிப்புகளை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அவற்றை இங்கு காண்போம்.
1. ‘தமிழ்நாடு செமி - கண்டக்டர் திட்டம் 2030’ எனும் ஐந்தாண்டு கால திட்டம் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்.
2. செமி- கண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம் சென்னையில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.
3. கோவை சூலூரில் 100 ஏக்கர் பரப்பளவிலும், பல்லடம் அருகே 100 ஏக்கர் பரப்பளவிலும், செமி-கண்டக்டர் உற்பத்திக்கான இயந்திர தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்.
4. ஓசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.400 கோடி மதிப்பில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.
5. விருதுநகரில் புதிய மினி டைடல் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 6,600 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
6. ஓசூர் அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்படும்.
7. கடலூர் மற்றும் மதுரை மேலூரில் தலா 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும் வகையில் இரண்டு காலணி தொழிற்பூங்காக்கள் ரூ.250 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
8. கள்ளக்குறிச்சியில் காலணி திறன் பயிற்சி மையம் ஒன்றை சிப்காட் நிறுவனம் நிறுவிடும்.
9. மத்திய மண்டலத்தில் 5000 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் வார்ப்பக தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும்.
10. தூத்துக்குடியில் செயற்கை இழை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
11. கடலூரில் 500 ஏக்கர் பரப்பளவிலும், புதுக்கோட்டையில் 200 ஏக்கர் பரப்பளவிலும் புதிய தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படும்.
12. கோவையில் உயர் தொழில்நுட்ப பம்ப் மோட்டார் உற்பத்திக்கான உயர்திறன் மையம், வார்ப்பக தொழிலுக்கான உயர்திறன் மையம் ஒன்றும் அமைக்கப்படும்.