“எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” - திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழா குறித்து அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!
உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வரும் ஜூலை 7-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. தொடர்ந்து ஜூலை 1-ந் தேதி முதல் 7 நாட்கள் வேள்விச்சாலை நடைபெறவுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை தமிழில் வேதங்கள் ஓத வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், செந்தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது.
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவில் 65,000 காவலர்கள் பாதுகாப்பு பணி மேற்கொள்வார்கள். 160 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
64 ஓதுவா மூர்த்திகளை கொண்டு செந்தமிழில் குடமுழுக்கு நடைபெகிறது.ட்ரோன் மூலம் புனித நீர் தெளிக்கப்படும். எல்இடி திரைகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும். நாள் முழுவதும் வடை பாயாசத்துடன் அறுசுவை விருந்து வழங்கப்படும். 1 லட்சம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். பழனியை போல் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் குடமுழுக்கு நடத்தப்படும். தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும். சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடைபெறும். தமிழ் வேத மந்திரம் நிச்சயமாக ஒலிக்கும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ். குடமுழுக்கு அன்று யாககுண்டங்கள் மட்டுமன்று விமான கலச நன்னீராட்டு போதும் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் தமிழ் ஒலிக்கும். எப்போதும் தமிழ் ஒலிப்பதை நாம் காதுகளால் கேட்டு இனிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.