For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வங்கதேச புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சையது ரெஃபாத் அகமது!

04:36 PM Aug 11, 2024 IST | Web Editor
வங்கதேச புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சையது ரெஃபாத் அகமது
Advertisement

வங்கதேச உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓ பைதுல் அசன் (65) தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது இன்று (11.08.2024) பதவியேற்றார். 

Advertisement

வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் கடந்த 8ம் தேதி இரவு பதவியேற்றார். அவருக்கு அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் கடந்த இரண்டு நாட்கள் அமைதி நிலவிய நிலையில் மாணவ அமைப்புகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கின.  வங்கதேச உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் வங்கதேச உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தலைமை நீதிபதி பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதித்தனர். பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் முடிவடைந்த நிலையில், நீதிபதிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது வங்கதேசத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் தலைமை நீதிபதி ஓ பைதுல் அசன் (65) தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் வங்கதேச உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரெஃபாத் அகமது இன்று பதவியேற்றார்.  உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 12.45 மணியளவில் அதிபர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெஃபாத் அகமது புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். தலைமை நீதிபதிக்கு அதிபர் முகமது சஹாபுதீன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Tags :
Advertisement