நீட் முதுநிலைத் தேர்வை ஆக.3ம் தேதி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!
நீட் முதுநிலைத் தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு நடத்த அனுமதி கோரிய தேசிய தேர்வுகள் வாரியத்தின் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. விசாரணை முடிவில் 3ம் தேதி தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தேசிய தேர்வுகள் வாரியம் :
2.20 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். தேர்வை ஒரே ஷிப்ட் அடிப்படையில் நடத்தினால், தற்போது உள்ள தேர்வு மையங்களை விட 450 கூடுதல் மையங்கள் தேவைப்படும். எனவே தேர்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த அனுமதிக்க வேண்டும்.
தேர்வு மையங்களை கண்டறிந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது
நீதிபதிகள் :-
தேர்வு வாரியம் கோரும் அவகாசம் மிக அதிகமாக உள்ளது. கால அவகாசத்தை குறையுங்கள். மையங்களை கண்டறிய ஏன் இவ்வளவு அவகாசம் தேவைப்படுகிறது?.
தேர்வு வாரியம் :
பாதுகாப்பு காரணங்களுக்காகதான் கூடுதல் அவகாசம் கோருகிறோம். அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். பல்வேறு தேர்வுகள் ஏற்கெனவே மாற்றி வைக்கப்பட்டுள்ளது. நடைமுறை சிக்கல்கள் காரணமாக கூடுதல் அவகாசம் தேவை. இரண்டு மடங்காக மையங்களை அதிகப்படுத்த வேண்டியுள்ளது.
மாணவர்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மாணவர்கள் தரப்பு :
தேர்வுகளை நடத்த தயார் நிலையில் உள்ளதாக தேர்வுகள் வாரியத்தின் இணைய பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. தேர்வு நடத்தும் TCS நிறுவனமும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. மற்ற தேர்வுகளைப் போல் அல்லாமல் பாடத்திட்டங்கள் அடிப்படையிலான தேர்வு இது.
நீதிபதிகள்:-
கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்படுகிறது. நீட் முதுநிலைத் தேர்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்தலாம். ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு பிறகு கூடுதல் அவகாசம் வழங்கப்படாது. அன்றே தேர்வை நடத்த வேண்டும்.