திருப்பதி லட்டு விவகாரத்தில் திடீர் திருப்பம் - சிபிஐ அதிர்ச்சி தகவல்!
ஆந்திராவில் சந்திரபாபு கடந்தாண்டு ஆட்சியமைத்த பிறகு, திருப்பதி கோயிலில் கொடுக்கப்படும் லட்டுவில், விலங்கின் கொழுப்புகள் கலப்படம் செய்ததாக முந்தைய ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு மீது பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். அதன் பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதிக்கு கோயிலுக்கு நெய் வழங்கிய திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் மீது சோதனை நடத்தப்பட்டு, அந்த நிறுவனத்தின் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அந்த உத்தரவை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்தது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தியது. தொடர்ந்து இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், சிபிஐ மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த விசாரணை உத்திர பிரதேசத்தை சேர்ந்த போலேபாபா டெய்ரி மற்றும் வைஷ்ணவி டெய்ரி நிறுவனங்கள் மீதும் நடத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் அம்மனு மீதான விசாரணையில் சிபிஐ தரப்பில் இருந்து, திருப்பதி தேவஸ்தானத்துடன் முறையான ஒப்பந்தம் பெறாத போலேபாபா டெய்ரி நிறுவனம் ஏ.ஆர். டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தை பயன்படுத்தி நெய்க்கு பதிலாக ரசாயணம் கலந்த பாமாயிலை விநியோகம் செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. அதனால் குற்றம் சாட்டப்பட்ட பண பலம் படைத்தவர்கள் ஜாமினில் வந்தால், சாட்சியங்கள் பாதிக்க கூடும் என்றும் இது சட்டபூர்வமானது மட்டுமல்ல, மத உணர்வும் இதில் அடங்கியுள்ளது என்பதால், இந்த வழக்கின் விசாரணையை தீவிரமாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.