நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து மாணவர் சூரிய நாராயணன் அசத்தல்!
தேசிய தேர்வுகள் முகமை நடத்திய நீட் தேர்வில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரிய நாராயணன் மாநில அளவில் முதலிடம் பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
இந்தியா முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் மாணவர் சூரிய நாராயணன் 720 க்கு 665 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 27 வது இடத்தையும் பெற்றுள்ளார். மேலும் மாணவர் சூரியநாராயணன் சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 495/500 மதிப்பெண்கள் பெற்றதும் ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மாணவர் சூரியநாராயணன் மழலையர் வகுப்பிலிருந்து 12 ம் வகுப்பு வரை புஷ்பலதா வித்யா மந்திரி பள்ளியில் பயின்றுள்ளார். இன்று மாணவருக்கு பள்ளி தாளாளர் மற்றும் நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தமிழ்நாடு அளவில் சாதனை பெற்றதற்கு பள்ளி நிர்வாகம் தரப்பில் விருது வழங்கி கௌரவித்தனர்.
தமிழ்நாடு அளவில் முதலிடம் பெற்றது குறித்து மாணவர் கூறும் போது, “ஆசிரியர்கள் கொடுத்த ஊக்குவிப்பும், நாள் தவறாமல் நடத்திய பாடங்கள் அனைத்தையும் படித்ததும் எனக்கு தேர்வை எதிர் கொள்ள எளிதாக அமைந்தது” என்று கூறியுள்ளார்.