பட்டினியால் தவிக்கும் குழந்தைகள்... காசாவிற்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் சென்ற கிரெட்டா துன்பெர்க்கை நாடு கடத்திய இஸ்ரேல்!
கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான போர் தற்போது வரை தொடர்கிறது. மேலும் நாளுக்கு நாள் காசா மீது கொடூர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. மேலும் காசாவுக்கு உலக நாடுகள் கொடுக்கும் மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி வருகிறது.
இதனால் பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறையாடு மற்றும் பட்டினியால் இறக்கின்றன. இதற்கு ஐ.நா உட்பட பல நாடுகளும் கண்டனம் தெரிவித்தும் தனது மனிதாபிமானமற்ற செயலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் ஸ்வீடன் சமூக ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க்கும் இஸ்ரேலால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரெட்டா துன்பெர்க், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான பாலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த பிரான்ஸ் பிரதிநிதி ரிமா ஹாசன் உள்பட 12 தன்னார்வலர்கள் அடங்கிய குழுவை ஃப்ரீடம் ஃப்ளோடிலா கூட்டமைப்பு, நிவாரணப் பொருள்களுடன் காசாவுக்கு அனுப்பி வைத்தது.
‘மாட்லீன்’ என்ற கப்பலில் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுடன் புறப்பட்ட இவர்களை, நேற்று காசா கடற்கரையிலிருந்து மேற்கே சுமார் 185 கிலோமீட்டர் (115 மைல்) தொலைவில் இஸ்ரேல் ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதில் இஸ்ரேலை விட்டு வெளியேற மறுத்த 5 பிரெஞ்சு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தது. இதில் காலநிலை மாற்றம் காரணமாக விமானத்தில் செல்ல மறுத்த துன்பெர்க், வணிக விமானம் மூலம் பாரிஸுக்கு நாடு கடத்தப்பட்டார்.
இஸ்ரேலில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர், பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் வந்திறங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“இஸ்ரேல் செய்து வரும் எண்ணற்ற விதிமீறல்களின் பட்டியலில் சேர்க்கப்படும் மற்றொரு உரிமை மீறல் இது. பாலஸ்தீனியர்கள் சந்தித்து வரும் துன்பங்களை ஒப்பிட்டால் எனக்கெல்லாம் எந்த துன்பமும் இல்லை. காசாவில் ஒரு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது. திட்டமிட்ட பட்டினி நிலவுகிறது என்பதே உண்மையான கதை. காசாவிற்குள் உதவிகளை அனுமதிக்காததன் மூலம், சட்ட விதிமீறல்களை, போர் குற்றங்களை தொடர்ந்து திட்டமிட்டே இஸ்ரேல் அரங்கேற்றி வருகிறது.
காசா மீதான தாக்குதலை வேடிக்கை பார்க்கும், நமது சொந்த நாட்டின் அரசுகளால் நிகழ்த்தப்படும் துரோகத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. நாங்கள் எங்கள் முயற்சியை கைவிடமாட்டோம். இஸ்ரேலின் அட்டூழியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கடைசிவரை போராடுவோம்” என தெரிவித்தார்.
தன்பர்க்கின் குற்றச்சாட்டை மறுத்த இஸ்ரேல், இது மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் விளம்பர நடவடிக்கை என்று விமரிசித்துள்ளது. தங்களின் விதிமுறைகளுக்கு உள்பட்ட நிவாரணங்கள் மட்டுமே காஸாவுக்குள் அனுப்பி வைக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.