நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த முருகையன், வெண்ணிலா, தேவி ஆகியோருக்கு சொந்தமான மூன்று பைபர் படகுகளில் 12 மீனவர்கள் கடந்த 10ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அதிவிரைவு பைபர் படகு மூலம் எல்லை தாண்டி அங்கு வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் மீனவர்களை கல் மற்றும் பைப், கயிறு கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.
அடுத்தடுத்த படகுகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் மீனவர்கள் பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன், ரத்தினம் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி படகின் எஞ்சின், தங்க சங்கிலி, ஜிபிஎஸ் கருவி வலைகள் உள்ளிட்ட உடைமைகளை பறித்துக் சென்றுள்ளனர். இதனை அடுத்து இன்று அதிகாலை மீனவர்கள் உதவியுடன் கரை திரும்பிய நிலையில் காயமடைந்த 3 மீனவர்கள் நாகை ஒரத்தூர் அரசுக் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் வருகின்றனர்.
இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை அதிவேக படகில் வந்து சுற்றிவளைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி, ராடு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கியதாகவும் காயமடைந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே மத்திய, மாநில
அரசுகள் உடனடியாக தலையிட்டு தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டுமென படுகாயமடைந்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.