For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்... #TNSTC அறிவிப்பு!

09:41 PM Oct 01, 2024 IST | Web Editor
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்     tnstc அறிவிப்பு
Advertisement

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Advertisement

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் தொடர் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, பயணிகளை கருத்திற்கொண்டு சிறப்பு கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;

அக்.4 (வெள்ளிக்கிழமை), அக்.5 (சனிக்கிழமை), அக்.6 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும், பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் வெள்ளி மற்றும் சனி இரண்டு நாட்களும் 260 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களும் 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து வெள்ளிக்கிழமையன்று 15 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமையன்று 15 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து, சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,939 பயணிகளும், சனிக்கிழமை 3,869 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,657 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி, தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement