தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் !
தை அமாவாசையை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கம் குறித்து மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"29.01.2025 (புதன்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு 28/01/2025 அன்று சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தமிழகத்திலும் மற்றும் அண்டை மாநிலமான பெங்களூரிலிருந்தும் பொது மக்கள் தை அமாவாசை அன்று புண்ணியஸ்தலமான இராமேஸ்வரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதற்கு ஏதுவாக இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி வருகின்ற 29/01/2025 அன்று தை அமாவாசை வருவதால் இராமேஸ்வரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில் வருகின்ற 28/01/2025 செவ்வாய்கிழமை அன்று சென்னை கிளாம்பாக்கத்திலிருந்தும். சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கும் மற்றும் 29/01/2025 இராமேஸ்வரத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கம், சேலம் கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேற்கூறிய இடங்களிருந்து www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.