For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#TVK மாநாட்டுக்கு வந்தவர்களை துல்லியமாக கணக்கிட சிறப்பு ஏற்பாடு!

01:09 PM Oct 27, 2024 IST | Web Editor
 tvk மாநாட்டுக்கு வந்தவர்களை துல்லியமாக கணக்கிட சிறப்பு ஏற்பாடு
Advertisement

தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கையை க்யூ.ஆர். கோடு மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வந்தவர்களின் விவரங்கள், வருகையைப் பதிவு செய்வதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை விஜய் தொடங்கிய நிலையில், கட்சிக்கான கொடியும், கொடிப் பாடலும் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (அக். 27) நடைபெறுகிறது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி மாநாட்டுப் பகுதி அமைந்துள்ள இடத்தில் கடந்த 4-ம் தேதி பந்தல்கால் நடுதலுடன் மாநாட்டுப்பணிகள் தொடங்கின. மாலை 3 மணிக்கு மேல் மாநாடு தொடங்கவுள்ளது. மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் செய்யப்பட்டுள்ளன.

முதலில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சித் தலைவர் விஜய், ரிமோட் மூலம் கட்சிக் கொடியேற்றுவார். பின்னர், மாநாட்டு மேடையிலிருந்து 600 மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் வாக் பகுதியில் நடந்து சென்று தொண்டர்களை நோக்கி கையசைத்த பின்னர், மாநாடு தொடங்கும். மாநாட்டின் தொடக்கமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பின்னர், மாநாட்டுக்காக இடம் கொடுத்தவர்கள். உதவியவர்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

தொடர்ந்து, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், நிறைவாக கட்சித் தலைவர் விஜயும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் 700 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநாட்டின் முகப்பில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை மதில்சுவர் வடிவத்தில் எண்ம (டிஜிட்டல்) பதாகைகள் அமைத்து, அதன் மேற்பகுதியில் மிகப்பெரிய அளவிலான விஜய்யின் உருவப்படம் பொருத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, பெரியார், காமராஜர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் எண்ம பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுத் திடலை ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து, அவற்றில் தலா 1,500 பேர் அமரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, நாற்காலி போடப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு தனியே இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கையை க்யூ.ஆர். கோடு மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டிற்கு வந்தவர்களின் விவரங்கள், வருகையைப் பதிவு செய்வதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags :
Advertisement