பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்கள் | தண்ணீர் வடியாததால் மக்கள் அவதி!
பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களில் தண்ணீர் வடியாததால் மக்கள் தீராத துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பலர் சிக்கி தவித்து வரும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் மயில்சேது மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்ட மீட்பு படையினர் முதலுதவிக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் லட்சுமி நகர், பெத்தாச்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. போக்குவரத்து பணிமனைக்குள் மழைநீர் புகுந்ததால் பேருந்துகளை இயக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மதுரை சாலையில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகுந்த நீரை வெளியேற்றும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் கூடங்குளம் நீரோடையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆபத்தை உணராமல் ஓடையில் ஆட்டம் போட்டு வந்த சிறுவர்களை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகையிலிருந்து மைசூர் செல்லும் மலைப்பாதையில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.