பொதுத்தேர்வில் மகன்கள் தோல்வி.. விரக்தியில் தந்தை எடுத்த விபரீத முடிவு - நாமக்கலில் சோகம்!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த ஆன்ட்றா பட்டி அருகே உள்ள
குப்பாண்டாம் பாளையம் ஊராட்சி வன்னியர் கோவில் மேடு பகுதியைச் சேர்ந்தவர் கபில்ஆனந்த் (வயது 41). இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவரின் முதல் மகனான ஹரி ரஞ்சித் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். 2வது மகனான விக்னேஷ் அதே பள்ளியில் 10ம் வகுப்பு
படித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் டூ மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதில் கபில் ஆனந்தின் 2 மகன்களும் தேர்ச்சி பெறவில்லை. கபில் ஆனந்த் தனது மகன்கள் தேர்வில் தோல்வியடைந்ததால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : ‘ஜெயிலர் 2’ படத்தின் அப்டேட் கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்!
தான் படிக்கவில்லை தன் மகன்களாவது படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த கபில் ஆனந்த் நேற்று மாலை 7.30 மணியளவில் இது குறித்து வீட்டிற்கு வெளிய அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்ட கவில் ஆனந்த், அவரது மனைவியின் புடவையில் தூக்கு மாட்டிக்கொண்டார். அவர் திடீரென வீட்டுக்குள் ஓடுவதை கண்ட மனைவி சத்தம் போட்டார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கடப்பாறை கொண்டு
கதவை உடைத்து தூக்கில் தொங்கிய கபில் ஆனந்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கபில் ஆனந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, அவரது உடலுக்கு உடற்கூராய்வு செய்ய அதே மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு ஊரக போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். தனது மகன்கள் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.