"அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணு உலை அருகே குடியிருப்பதும் ஒன்று தான்" - சீமான்
அணுகுண்டு மேல் அமர்ந்திருப்பதும், அணு உலை அருகே குடியிருப்பதும் ஒன்றுதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வேட்பாளர் ரவீணா ரூத் ஜேன்னை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஆவர் பேசியதாவது:
"ஒருபுறம் அணு உலை, ஒருபுறம் ஸ்டெர்லைட். எண்ணற்ற நச்சு ஆலைகள் நம் நிலத்தை, வளத்தை, காற்றை, நீரை எல்லாவற்றையும் விஷமாக்குகிறது. நாம் எவ்வளவு எதிர் போராட்டங்களை வைத்தாலும் அதை ஏறெடுத்து பார்க்காத நபர்களிடம் திரும்பத் திரும்ப அதிகாரத்தை கொடுக்கிறோம்.
அணு உலை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போராட்டம், ஒவ்வொருவர் மீதும் 400, 800 என எண்ணற்ற வழக்குகள். இந்த வழக்குகளை போட்ட கட்சிக்கு தான் நாம் தொடர்ச்சியாக வாக்களித்து வருகிறோம். 1986 இல் ரஷ்யாவில் அணு உலை வெடித்தது.
அணு உலையை குளிர்விக்க கூடிய தண்ணீரை வெளியேற்றினால் அதன் மூலம் முளைக்கும் புல் மூலமாகவும் அணுக்கள் பரவுகிறது. இந்த அணுக்கழிவை எங்கு வைப்பது என்பது தெரியாத நிலைதான் இருந்து வருகிறது. அணுக்கழிவை தங்க சுரங்கத்தில் புதைக்கலாமா என கருத்தை முன் வைத்தார்கள். அணு உலை கேரளாவிற்கும் வரக்கூடாது என போராடுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலை மிகவும் பாதுகாப்பானது என கூறுகிறார்கள். அணு உலை மீது விமானமே விழுந்து நொறுங்கினாலும் பாதுகாப்பானது என கூறுகிறார்கள்."
இவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.