அமெரிக்கா | புளோரிடா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு - 2 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் 2024ம் ஆண்டில் மட்டும் 385 துப்பாக்கி சூடு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதன்படி, அமெரிக்காவின் டல்லாஹஸ்ஸியில் உள்ள புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். உள்ளூர் நேரப்படி நேற்று காலை 11.50 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது. காரில் இருந்து இறங்கிய நபர் ஒருவர் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். சத்தம் கேட்டதும் அருகில் இருந்தவர்கள் அங்கிருந்து ஓடினர்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனவர். மேலும், 6 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளோரிடா மாநில பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பீனிக்ஸ் இக்னர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 20 வயதான இவர் போலீஸ் அதிகாரியின் மகள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இக்னர் தனது தாயாரின் துப்பாக்கியை, இந்த துப்பாக்கிச் சூட் சம்பவத்திற்கு பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அவர் பயன்படுத்திய துப்பாக்கி பல்கலைக்கழக வளாகத்தில் சம்பவம் நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், உயிரிழந்த இருவரும் மாணவர்கள் அல்ல என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது புளோரிடா பல்கலைக்கழகம் போலீசாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.