கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு - காவல்துறையினர் விசாரணை!
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள கொலம்பியா நாட்டில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே எதிர்க்கட்சியான பழமைவாத ஜனநாயக மையம் கட்சியை சேர்ந்த எம்.பி. மிகுல் உர்பெல் டர்பே (வயது 39) அதிபர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில் இவர் தலைநகர் பொகொடாவில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது முதுகு பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் உயிருக்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் வேறு யாராவது ஈடுபட்டிருக்கிறார்களா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என கொலம்பியாவின் பாதுகாப்பு அமைச்சர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தார்.