தவெக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீச்சு... காலையிலேயே பரபரப்பு!
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று (பிப்.26) நடைபெறுகிறது. விழுப்புரத்தில் நடந்த கட்சியின் முதல் மாநாட்டுக்கு பிறகு விஜய் பங்கேற்கும் கூட்டம் என்பதால் தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தவெக நிர்வாகிகள் 3 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் காலணி வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் குழந்தையின் செருப்பை தனது காதில் வைத்து செல்ஃபோனில் பேசுவது போல சைகை காட்டிவிட்டு தீடீரென விஜயின் வீட்டிற்குள் வீசினார். இந்தச் சம்பவத்துக்கான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படியுங்கள் : மகளிர் பிரீமியர் லீக் | குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!
அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர். மேலும், செருப்பை வீசி நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில், விஜய் மீது முட்டை வீசுவதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இந்தக் காலணி வீச்சு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.