பங்குதாரர்கள் நிம்மதி பெருமூச்சு - 1200 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது இன்றைய பங்குச்சந்தை!
இந்திய பங்குச் சந்தை நேற்று காலை தொடங்கியது முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆகியவை கடந்த வாரம் ஏறுமுகத்தில் இருந்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கைகளால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இருந்து விலகி பாதுகாப்பான சொத்துக்களில் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
இதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 3000 புள்ளிகள் சரிந்து 72 ஆயிரத்து 509 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேநேரம், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி புள்ளிகள் சுமார் 930 புள்ளிகள் சரிந்து 21 ஆயிரத்து 975 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. நேற்று வர்த்தக நேர முடிவில் அதிகபட்சமாக 22,254.00 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 21,743.65 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 742.85 புள்ளிகள் குறைந்து 22,161.60 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்த நிலையில் இன்று காலை பெரும் அச்சத்துடனே தொடங்கிய பங்குச் சந்தையின் பிஎஸ்இ சென்செக்ஸ் 1,200 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. சந்தைகள் சரிவுக்குப் பிறகு மீண்டு வருவதால் நிஃப்டி 50 22,500க்கு மேல் உயர்ந்தது. காலை 9:40 மணிக்கு, பிஎஸ்இ சென்செக்ஸ் 1,025 புள்ளிகள் அல்லது 1.40% அதிகரித்து 74,163.30 இல் வர்த்தகம் செய்யப்பட்டது. நிஃப்டி 50 310 புள்ளிகள் அல்லது 1.40% அதிகரித்து 22,472.05 இல் இருந்தது.