"சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதி" - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
"சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் உறுதியளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன் தாயகம் திரும்புவதற்கான தற்காலிக பயண ஆவணத்தை இலங்கை துணை தூதரகம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சாந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ்பாபு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகினார். அவர் நீதிமன்றத்தில் “இதுவரை தங்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்கவில்லை என்பதால், தற்போது நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதனடிப்படையில், சாந்தனை இலங்கைக்கு அனுப்புவதற்கான உத்தரவு ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும்” எனவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.