For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கேரளாவை உலுக்கிய பாலியல் புகார் - இயக்குநர் #VKPrakash-க்கு ஜாமீன்!

08:00 PM Sep 19, 2024 IST | Web Editor
கேரளாவை உலுக்கிய பாலியல் புகார்   இயக்குநர்  vkprakash க்கு ஜாமீன்
Advertisement

பாலியல் புகாருக்குள்ளான மலையாளத் திரைப்பட இயக்குநர் வி.கே. பிரகாஷ் போலீஸ் காவலில் இருந்து வந்த நிலையில் இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Advertisement

மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக  குற்றம்சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டினார்.

இதன் பின்னர் மலையாள நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து நடிகர் சித்திக் ராஜிநாமா செய்தார். அதேபோல், கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் இயக்குநர் ரஞ்சித் விலகினார். இதற்கிடையே, நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வந்தனர். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜிநாமா செய்தனர். இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர்.

அந்தவகையில் திரைப்பட இயக்குநர் வி.கே.பிரகாஷ் மீது பெண் எழுத்தாளர் பாலியல் புகார் அளித்தார். இதனையடுத்து, பள்ளித்தோட்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்கில் இயக்குநர் பிரகாஷ் முன்ஜாமீன் பெற்றிருந்தார்.

இருப்பினும், காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மூன்று நாள்களுக்கு விசாரணை நடத்திய பிறகு அவரை விடுதலை செய்யலாம் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பள்ளித்தோட்டம் காவல் துறையினர் அவரை கைது செய்து மூன்று நாள்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மூன்று நாள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி வி.கே.பிரகாஷ் இன்று (செப். 19) ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Tags :
Advertisement