நடிகை விவகாரம் தொடர்பான சீமானின் மேல்முறையீட்டு மனு - மார்.3 விசாரணை!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீமன்றம், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், அதேப்போன்று 12 வாரத்துக்குள் போலீசார் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை என்பதால், இந்த விவகாரத்தில் முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேப்போன்று வழக்கின் விசாரணையை 12 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமையன்று(மார்.3) விசாரணைக்கு வருகிறது. நீதிபதி பி.வி.நாகரத்ன தலைமையிலான அமர்வில் 62வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.