சுட்டெரிக்கும் வெயில் - ஒடிசாவில் பள்ளிகளின் நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவு!
நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது பொதுத்தேர்வு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற்று வரும் சூழலில் கட்டாயம் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது.
ஒடிசா மாநிலத்தில் போலாங்கிர் மாவட்டத்தில் நேற்று (மார்ச் 20) அதிகபட்சமாக 104.5 டிகிரியும், பவுத் மாவட்டத்தில் 104 டிகிரியும் வெயில் சுட்டெரித்துள்ளது. இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்கும் வகையில் பள்ளி நேரத்தை மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (மார்ச் 21) முதல் அமலுக்கு வந்துள்ளது.