பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம் - போலீசார் விசாரணை!
திருவெறும்பூர் அடுத்த கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணசமுத்திரத்தைச் சேர்ந்த மூக்கையன், காய்கறி வியாபாரி. இவரது மனைவி ராஜேஸ்வரி துப்புரவுப் பணியாளர். இவர்களுக்கு கனிஷ்கா (17) என்ற மகள் இருந்தார். கனிஷ்கா, பெல் நிறுவன வளாகத்தில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று காலை வழக்கம் போல மூக்கையன் மற்றும் ராஜேஸ்வரி இருவரும் தங்கள் பணிக்குச் சென்று விட்டனர். கனிஷ்கா வழக்கம் போல் பள்ளிச் சீருடை அணிந்து பள்ளிக்குச் செல்லத் தயாராகியுள்ளார். இந்நிலையில், வீட்டில் திடீரென சேலையால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வெகுநேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், அருகிலுள்ள வீட்டார் சந்தேகம் அடைந்தனர்.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கனிஷ்கா மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு கனிஷ்காவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கனிஷ்காவின் தந்தை மூக்கையன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவி கனிஷ்கா ஏன் உயிரை மாய்த்துக்கொண்டார் கொண்டார்? அதற்கான காரணம் என்ன? எனப் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.