சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!
ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கை மூன்று மாதத்தில் விசாரணை செய்து முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் கொரோனா விதிகளை மீறி செயல்பட்டதாக சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரை சாத்தான்குளம்
போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். கோவில்பட்டி கிளைச் சிறையில் இருந்த இருவரும் போலீஸ் தாக்குதலால் படுகாயமடைந்த நிலையில் அரசு
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பெற்று வந்த இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
செப்டம்பரில் தாக்கல் செய்தது. இந்த கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயராஜின் மனைவி செல்வராணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், வழக்கை விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் ஒரு சாட்சியிடம் மட்டுமே விசாரணை செய்ய வேண்டி உள்ளது. விரைந்து விசாரணை முடிந்து விடும் என தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தோம். இதில் தொடர்ந்து கால அவகாசம் வாங்கி விசாரணையை இழுத்தடித்து வருகின்றனர். எனவே வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என வாதிட்டார்.
இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்த நீதிபதி தந்தை, மகன் மரண வழக்கை மூன்று மாதத்திற்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.