For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Nandhan | "அடங்கமறுப்போரின் சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுகள்" - திருமாவளவன் வாழ்த்து!

05:20 PM Sep 29, 2024 IST | Web Editor
 nandhan    அடங்கமறுப்போரின் சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுகள்    திருமாவளவன் வாழ்த்து
Advertisement

'அடங்கமறுப்போரின்' சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுகள் என ‘நந்தன்’ படத்தை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் படக்குழுவுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் மினிமம் கியாரண்டி நடிகராக இருந்த சசிகுமார் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி திரைப்படங்களாகக் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கு அவர் தேர்வு செய்த கதைகளே காரணம் என சொல்லப்பட்டது. இதனால் ஒரு கட்டத்தில் அவர் படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில் 'அயோத்தி' என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் நம்பிக்கைக் கொடுக்கும் நடிகராக மாறியுள்ளார்.

இதையடுத்து அவர் இப்போது உடன்பிறப்பே இயக்குனர் ரா.சரவணன் இயக்கத்தில் ‘நந்தன்’ என்ற அழுத்தமானக் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த செப்.20ஆம் தேதி வெளியானது. மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், ‘நந்தன்’ திரைப்படத்தை பார்த்த விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. படக்குழுவுக்கு தனது பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

‘ஆள்வதற்கு மட்டுமல்ல; வாழ்வதற்கும் அதிகாரம் தேவை' என உரத்துப் பேசும் இயக்குநர் ரா.சரவணனின் குரல் 'நந்தன்' குரலாக ஒலிக்கிறது. ஊராட்சி அமைப்புகளில் சாதியம் எவ்வாறு கோரத் தாண்டவம் ஆடுகிறது என்பதை துணிச்சலாயத் தோலுரிக்கிறார் இயக்குநர் சரவணன்.

ஊராட்சிமன்றத் தலைவர் அம்பேத்குமாரை நிர்வாணப்படுத்தி ஊரே வேடிக்கை பார்க்க செருப்புக்காலால் மிதிக்கும் குரூரம் நெஞ்சைப் பதைக்க வைக்கிறது. அது சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மிகக் கேவலமாக இழிவுப்படுத்தும் கொடூரமான சாதி ஆணவத்தின் உச்சம்.

உள்ளாட்சி அமைப்புகள் வரையில் எளியோருக்கும் அதிகாரத்தைப் பரவலாக்குவதுதான் ஜனநாயகத்தைச் செழுமைப்படுத்தும் நடவடிக்கை. ஆனால், ஊர்களின் வேர்களில் இன்னும் சனாதனமே கோலோச்சுகிறது; சாதியமே கொட்டமடிக்கிறது என்பதை ஆவேசத்துடன் அம்பலப்படுத்தும் தோழர் சரவணன் அவர்களுக்கு 'அடங்கமறுப்போரின்' சார்பில் எமது மனமார்ந்த பாராட்டுகள்.

நடிகர் சசிகுமார், நடிகர் சமுத்திரக்கனி ஆகியோர் நடத்தும் அறப்போர் ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கிறது. சாதியத்தின் கோரமுகத்தைக் கண்முன்னே நிறுத்துகிறார் இயக்குநர் பாலாஜிசக்திவேல். சாதிவெறியாட்டத்தை எதிர்க்கும் போர்க்குணம் பெண்களுக்கும் தேவையென்பதை உணர்த்துகிறார் சுருதிபெரியசாமி.

இதையும் படியுங்கள் : புதிய அமைச்சர்கள் நால்வருக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு! யார் யாருக்கு எந்தெந்த இலாகா? முழு விவரம் இதோ!

களப்பலியாகும் நாயகன் நந்தன் ஜனநாயகத்தை நாடும் போராளி. "இனிமேல் தான் எங்கள் ஆட்டம் ஆரம்பம் " என சீறும் சிறுத்தை அம்பேத்குமார் சமூகநீதியைக் காக்கும் போராளி. சாதியத்தின் வன்மம் கண்டு கொதிக்கும் தோழர் சரவணன் சமத்துவத்தைத் தேடும் போராளி. வெல்லும் ஜனநாயகம்! "

இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/thirumaofficial/status/1840341299549130809
Tags :
Advertisement