கருணாநிதி நினைவிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது!
சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தூய்மை பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அம்பத்தூர் மண்டலத்தில் தூய்மை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் வெளி மண்டலத்தில் இருந்து தூய்மை பணியாளர்களை வரவழைத்து பணிகள் செய்யப்பட்டன. இதற்கிடையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பாக தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் கோரியும், சட்ட விரோத பணி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் போலீசார் தூய்மைப் பணியாளர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றி அழைத்து சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். அப்போது போலீசாருக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.