சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீதான வழக்கு - மீண்டும் புலன் விசாரணை தொடக்கம்!
பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசு அனுமதி பெறாமல், பெரியார் பல்கலைகழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி பவுண்டேசன் (PUTER Foundation) என்ற அமைப்பை தொடங்கியுள்ளதாகக் கூறி, சேலம் பெரியார் துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக, பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் (PUEU) சார்பில் இளங்கோவன் என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார்.
இந்த அமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய தன்னை, சாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாகவும் புகாரில் குற்றம் சாட்டியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் காவல் நிலையத்தினர், வழக்குப்பதிவு செய்து, துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்த நிலையில், அவரை நீதிமன்ற காவலில் வைக்க மறுத்த சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
இதனைத்தொடர்ந்து, தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரி துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறி, அவர்மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தடையை நீக்க கோரி காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், தடை நீக்கப்பட்டதால் மீண்டும் புலன் விசாரணை துவங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக உள்ள காரணத்தினால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.