வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்!
வங்கதேசத்தில் மாணவர்கள், காவல்துறையினர் இடையே மோதல் வெடித்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கதேசத்தில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியர்கள் கவனமுடன் இருக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அவசர உதவி என்றால் தாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுக இந்தியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் மீண்டும் 30 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்த இடஒதுக்கீடு அறிவிப்பை எதிர்த்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை துவங்கினர். ஆனால், ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர், போராட்டம் நடத்துபவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் வன்முறையாக மாறியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டக்கா உள்ளிட்ட நகரங்களில் மாணவர்கள் சாலைகளில் போராட்டத்தை நடத்தி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், 24 மணிநேர அவசர உதவி எண்ணையும் தூதரகம் வெளியிட்டுள்ளது.