பெங்களுர் அணி வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் - பிரதமர் மோடி இரங்கல்!
பதினேழு வருடத்திற்கு பெங்களூர் அணி முதன்முறையாக கோப்பையை வென்று ஐபிஎல் தொடரில் முத்திரை பதித்துள்ளது. இதனால் குஷியான அந்த அணியின் ரசிகர்கள் நேற்றிலிருந்தே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று(ஜூன்.04) சின்னசாமி மைதானத்தில் வெற்றி பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான பெங்களூர் அணி ரசிகர்கள் குவிந்ததால். கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேரி உயிரிழந்தனர். அத்துடன் பலர் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதனிடையே கூட்ட நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த நிலையில் பெங்களூர் நடந்த இந்த சோகத்திற்கு பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “பெங்களூருவில் நடந்த துயரச் சம்பவம் உண்மையிலேயே மனதை உடைக்கிறது. இந்த துயரச் சம்பவத்தின் போது தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், “ பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் மனதை உடைக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்த அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த துயரமான நேரத்தில், பெங்களூரு மக்களுடன் நான் நிற்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கர்நாடக அரசு அனைத்து சாத்தியமான ஆதரவையும் நிவாரணத்தையும் வழங்க வேண்டும். இந்த சோகம் நமக்கு உயிரை விட கொண்டாட்டமும் முக்கியமானது அல்ல என்பதையும் பொது நிகழ்வுகளுக்கான ஒவ்வொரு பாதுகாப்பு நெறிமுறையும் மதிப்பாய்வு செய்யப்பட்டு கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.