உக்ரைன் மீது ரஷியா டிரோன் தாக்குதல் - குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழப்பு!
உக்ரைன், ரஷியா இடையேயான போர் ஆயிரத்து 186வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கடந்த வாரம் இரு நாட்டு ராணுவத்தினரும் உக்கிரமாக போர் புரிந்து வரும் சூழலில், உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதன்முறையாக துருக்கியில், நேரடி பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டு மணி நேர பேச்சுவார்த்தையின் முடிவில், இரு நாட்டு போர்க்கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, நேற்று முன்தினம் முதல் இரு தரப்பிலும் போர்க் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட பல இடங்களில் உக்ரைன் ராணுவம் ஏவுகணைகள் வாயிலாக தாக்குதல் நடத்தியது. இதனால் கைதிகள் பரிமாற்றம் தொடருமா என சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நகரங்கள் முழுவதும் 367 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
இந்த பயங்கர தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். ரஷ்யா ஏவிய 266 ட்ரோன்கள் மற்றும் 45 ஏவுகணைகளை உக்ரைன் விமானப் படை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.