For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#China | சீன அதிபரை 5 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் சந்தித்து பேசிய #PMModi!

09:55 PM Oct 23, 2024 IST | Web Editor
 china   சீன அதிபரை 5 ஆண்டுகள் இடைவேளைக்கு பின் சந்தித்து பேசிய  pmmodi
Advertisement

ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisement

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷ்யா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பின் 16-ஆவது உச்சி மாநாடு நிகழாண்டு ரஷ்யா தலைமையில் அந்நாட்டின் கலாச்சார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரத்தில் நேற்றும், இன்றும் (அக். 22, 23) நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்றடைந்தார். மேலும், இதில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ஈரான் நாட்டின் அதிபர் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அங்கு பிரதமர் மோடி ஈரான் அதிபர், ஐக்கிய அரசு அமீரக அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். அந்த வகையில், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.ஏற்கனவே லடாக் பகுதியில் இருநாடுகளும் இணைந்து ரோந்து பணியை மேற்கொள்ள டீல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மோதலுக்கு தீர்வு காண்பதில் சீனாவும், இந்தியாவும் உடன்பாட்டை எட்டியுள்ளது. இந்த உடன்பாட்டுக்கு நடுவே இன்று பேச்சுவார்த்தை நடந்தது.

இது 5 ஆண்டுகளுக்கு பிறகு இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற முறையான இருதரப்பு பேச்சுவார்த்தை ஆகும். எனவே, இந்த பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு சீன அதிபர் தமிழ்நாட்டின் மாமல்லபுரத்திற்கு வருகை தந்தபோது இருவருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன் பிறகு நவம்பர் 2022-ல் ஜி20 தலைவர்களுக்கு இந்தோனேசிய அதிபர் வழங்கிய விருந்து நிகழ்ச்சியின்போதும், ஆகஸ்ட் 2023-ல் ஜோகனஸ்பெர்க்கில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டின் போதும் பிரதமர் மோடி மற்றும் ஷி ஜின்பிங் இடையே சிறிய அளவிலான உரையாடல்கள் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பு குறித்து பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், "பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 5 ஆண்டுகளுக்கு பிறகு முறைப்படி நாம் சந்திப்பது இதுவே முதல்முறை. இருநாட்டு மக்களும், சர்வதேச சமூகமும் நமது சந்திப்பு குறித்து மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. இரண்டு நாடுகளும் பழமையான நாகரீகம் கொண்ட நாடுகள். இந்த சந்திப்பு நமது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்" என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், "5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரு நாட்டின் தலைவர்களும் முறையான சந்திப்பை நடத்தி இருக்கிறோம். இந்தியா-சீனா இடையிலான உறவு இருநாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கும் மிகவும் முக்கியமானது என நாங்கள் நம்புகிறோம். தற்போது இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. நமது உறவுகளில் பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை ஆகியவைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து, பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்தது குறித்து பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, "உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இந்திய-சீன உறவுகள் மிக முக்கியம். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை இருதரப்பு உறவுகளை வழி நடத்தும்" என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement