ரூ.25,000 கோடி ஊழல் வழக்கு - அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு!
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், கடந்தாண்டு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் அஜித் பவார். பின்னர், மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வரானார். பாஜகவில் அஜித் பவார் இணைந்ததற்கு, சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வழக்கே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 2005ம் ஆண்டு முதல் 2010 வரை மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கி ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில், ரூ.25,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் துணை முதல்வர் அஜித்பவார், அவரது மனைவி சுனேத்ரா பவார் மற்றும் அவர்களது உறவினர் ரோகித் பவார் உள்ளிட்டோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாராமதி தொகுதியில் பாஜக சார்பில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிடுகிறார். இந்நிலையில், இருவரின் அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் சர்க்கரை ஆலை கடன் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நீதிமன்றத்தில் வழக்கை முடித்து வைக்கும் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில், தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்பட்ட கடனால் வங்கிக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை. முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் உள்ளிட்டோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பல கோடி ஊழல் வழக்கில் தொடர்புடையைவர்களை மிரட்டி, பாஜக பக்கம் இழுத்துவிட்டு, அவர்களை புனிதர்களாக மாற்றும் வேலையை பாஜக செய்வதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. தற்போது அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார், ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதால், ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் பாஜவின் வாஷிங் மெஷின் மீண்டும் வேலை செய்ய தொடங்கிவிட்டதாக காங்கிரஸ், உத்தவ் சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.