இந்தோனேசியா கல் குவாரியில் பாறை சரிந்து விபத்து - 14 பேர் உயிரிழப்பு!
இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் சுண்ணாம்புக் கல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கல் குவாரியில் நேற்று காலை பாறைகள் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் மற்றும் ஏராளமான இயந்திரங்கள் பாறைகளுக்குள் புதைந்தன. இந்த விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சுரங்கம் சட்டப்படி உரிய அனுமதி பெற்று இயங்கி வந்தாலும், அங்குப் போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லை என மேற்கு ஜாவா ஆளுநர் டெடி முல்யாடி தெரிவித்துள்ளார்.
சுரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குழிகள் அனைத்தும் நிரந்தரமாக மூடப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு சுலாவெசி தீவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தங்கச் சுரங்கம் மண்ணுக்குள் புதைந்ததில், 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.