வெற்றி துரைசாமி உடலுக்கு ஆர்.என் ரவி நேரில் அஞ்சலி...
விபத்தில் உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி தனது உதவியாளர் கோபிநாத்துடன் இமாசலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடந்த 4-ந் தேதி அவர் சென்ற கார் மலைப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் விழுந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் தஞ்ஜின் இறந்தார். மேலும், கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து காணாமல் போன வெற்றியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், அவரது உடல் நேற்று மீட்கப்பட்டு, உடல் பிரேத பரிசோதனைக்காக சிம்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதையடுத்து வெற்றியின் உடல், ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் இன்று மாலை சென்னைக்கு கொண்டு வரபபட்டது.
அவரது உடல் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி , சைதை துரைசாமி அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று,விபத்தில் உயிரிழந்த அவரது மகன் வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.