இஸ்ரேல் - ஈரான் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் - பற்றி எரியும் எண்ணெய்க் கிடங்கு!
ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது நேற்று முன்தினம் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், ஈரானின் மூன்று முக்கிய படைத்தளபதிகள் மற்றும் அணுசக்தி விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய அணு ஆயுத தளம் பலத்த சேதம் அடைந்தது. மேலும் 78 பேர் உயிரிழந்ததாகவும், 320 படுகாயமடைந்ததாகவும் ஈரான் ஐநா பிரதிநிதி தெரிவித்தார்.
இதற்குப் பதிலடியாக, இன்று காலை வரை ஈரான் “ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்” என்ற பெயரில் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இந்த தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 34 பேர் காயமடைந்தனர். மேலும் ரிஷோன் லெசியோனில் நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் இஸ்ரேல் - ஈரான் நாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஏவுகணைகளை வீசி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இஸ்ரேல் வீசிய ஏவுகணையால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கு பற்றி எரிந்து வருவதாக ஈரானிய எண்ணெய் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.