மணிப்பூரில் மீண்டும் கலவரம் - 5 நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கம்!
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி - குகி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் மோதல் வெடித்தது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதற்காக முதலமைச்சர் பைரன் சிங் பதவி விலகினார்.
இதனையடுத்து அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைதி திரும்பியது.
இந்த நிலையில் மெய்தி இனத்தை சேர்ந்த அரம்பாய் தெங்கோல் என்ற குழுவின் தலைவர் கண்ணன் சிங் உள்பட 6 பேரை மணிப்பூர் போலீசார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். இதன் காரணமாக மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனிடையே தங்கள் தலைவரை விடுவிக்கக் கோரி குவாகிடெல் மற்றும் உரிபோக்கில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளை, நிலைமையை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரில் உள்ள இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர் மற்றும் காக்சிங் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவையை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஆளுநர் அஜய் குமார் பல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், இந்த 5 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.