For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“மதச்சார்பின்மையின் பெயரில் கலவரக்காரர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது” - மம்தா அரசை சாடிய யோகி ஆதித்தியநாத்!

மதச்சார்பின்மையின் பெயரில் கலவரக்காரர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது என மம்தா அரசை உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் விமர்சனம் செய்துள்ளார்.
04:32 PM Apr 15, 2025 IST | Web Editor
“மதச்சார்பின்மையின் பெயரில் கலவரக்காரர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்படுகிறது”   மம்தா அரசை சாடிய யோகி ஆதித்தியநாத்
Advertisement

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் கடந்த வாரம் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு கருதி பலர் அந்த மாவட்டத்தை விட்டு வெளியேறி, அருகிலுள்ள மால்டா மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அந்தளவிற்கு அம்மாவட்டத்தில் வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட பல உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, வன்முறையைக் கட்டுப்படுத்த மத்தியப் ஆயுத காவல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கலவரம் தொடர்பாக மேற்கு வங்க காவல்துறை இதுவரை 150 பேரைக் கைது செய்துள்ளது.

Advertisement

இதையடுத்து வக்ஃப் சட்டத்திற்கு எதிராக இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ISF) ஆதரவாளர்கள் நேற்று(ஏப்ரல்.13) பேரணி நடத்தினர், இதில் பேரணிக்கு அனுமதி வாங்கவில்லை என அக்கட்சி தலைவர் நௌஷாத் சித்திக்கை காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து, தெற்கு 24 பர்கானாஸின் பங்கரிலும் மோதல்கள் வெடித்தன. இந்த விவகாரம் தொடர்பாக பாஜக, மம்தா பானர்ஜியின் அரசாங்கமும் திரிணாமுல் காங்கிரஸும் இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக  குற்றம் சாட்டி வருகிறது. இதனிடையே அரசியலுக்காக வன்முறையில் ஈடுபடாதீர்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்து, வக்ஃப் திருத்த சட்டம் மேற்கு வங்கத்தில் செயல்படுத்தப்படாது என மீண்டும் உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, “மேற்கு வங்காளம் பற்றி எரிகிறது. அம்மாநில முதலமைச்சர் அமைதியாக இருந்துகொண்டு கலவரக்காரர்களை 'அமைதியின் தூதர்கள்' என்று அழைக்கிறார். மதச்சார்பின்மை என்ற பெயரில், கலவரக்காரர்களுக்கு அமைதியின்மையை உருவாக்க முழு சுதந்திரம் அளிக்கப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக முர்ஷிதாபாத் மாவட்டம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கிறது. அப்பகுதியில் சிறுபான்மை இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்தியப் படைகளை அனுப்பியதற்காக அங்குள்ள நீதித்துறைக்கு நான் நன்றி கூறுகிறேன். முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரம் குறித்து காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. சமாஜ்வாடி கட்சியும் அமைதியாக இருக்கிறது”

இவ்வாறு உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement