ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை சம்பவம் - திருநெல்வேலி டவுன் முன்னாள் காவல் உதவி ஆணையர் சஸ்பெண்ட்!
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகிர் உசேன் பிஜிலி (60) கடந்த மார்ச் 18ம் தேதி திருநெல்வேலி டவுன் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த தச்சநல்லூர் பால் கட்டளையைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் டவுன் பகுதியைச் சேர்ந்த அக்பர்ஷா ஆகிய இருவர் திருநெல்வேலி நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதன் பின்பு
இவ்வழக்கில் தொடர்புடைய முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இவ்வழக்கு தொடர்பாக திருநெல்வேலி டவுன் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் திருநெல்வேலி டவுன் சரக முன்னாள் காவல் உதவி ஆணையரும் தற்போது கோவை மாநகர காவல் துறையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வரும் செந்தில்குமாரையும் சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.