விருதுநகர் அருகே வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
விருதுநகர் அருகே கோவில்புலிக்குத்தியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ‘சத்ய பிரபா’ என்ற பட்டாசு ஆலையில், இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத்தினருக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், சின்னவாடி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (05.02.2025) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில், அருப்புக்கோட்டை வட்டம். வதுவார்பட்டியைச் சேர்ந்த இராமலட்சமி (வயது 50) க/பெ.கோனப்பா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முருகேஸ்வரி (வயது 55), மாணிக்கம் (வயது 50), மகாலட்சமி (வயது 48), வீரலட்சமி (வயது 37) , சைமன் டேனியல் (வயது 33) மற்றும் கஸ்தூரி (வயது 33) ஆகிய ஆறு நபர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நான்கு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.