For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவித்து, அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை வேண்டும்” - மத்திய அரசுக்கு #CMOTamilnadu கடிதம்!

12:31 PM Sep 09, 2024 IST | Web Editor
“இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவித்து  அபராதத் தொகையை தள்ளுபடி செய்ய நடவடிக்கை வேண்டும்”   மத்திய அரசுக்கு  cmotamilnadu கடிதம்
Advertisement

இலங்கை வசமுள்ள தமிழ்நாடு மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவித்திடவும், அவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதத் தொகையை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப். 8) அன்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டு, நேற்று முன்தினம் (செப். 7) அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களும், IND-TN-08-MM-198, IND-TN-08-MM-28, IND-TN-08-MM-52 பதிவெண்கள் கொண்ட அவர்களது மூன்று மீன்பிடி விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

2024-ம் ஆண்டில் மட்டும் (செப். 7 வரை) 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த 6 ஆண்டுகளில் இதுவே மிக அதிகமானதென்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை நீதிமன்றங்கள் மீனவர்களின் சக்திக்கு மீறிய அபராதங்களை விதித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் அங்கு சிறையில் இருக்கும் காலத்தை நீட்டிக்க வழி செய்வதோடு, ஏற்கனவே துயரத்தில் உள்ள மீனவக் குடும்பங்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பிற்கும் வழி வகுக்குமென்று தனது முந்தைய கடிதத்திலேயே சுட்டிக்காட்டியுள்ளதை நினைவுகூர்ந்துள்ளார்.

எனவே, இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்திடவும், கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தைக் விரைந்து நடத்திடவும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்”

இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Advertisement