For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சர்வதேச கருத்தரங்கு, நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிக்க திருத்த அறிவிப்பாணை வெளியீடு!

09:56 PM Mar 15, 2024 IST | Web Editor
சர்வதேச கருத்தரங்கு  நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிக்க திருத்த அறிவிப்பாணை வெளியீடு
Advertisement

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம்
விநியோகிக்க, தனி இடத்தை ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன்
உரிமம் வழங்குவது தொடர்பாக திருத்த அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Advertisement

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் விநியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு
பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர் சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி
அமர்வில் இன்று (மார்ச் 15) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மதுபானம் வினியோகிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பாக நேற்று (மார்ச் 14) பிறப்பிக்கப்பட்ட திருத்த அறிவிப்பாணையை தாக்கல் செய்தார்.

மேலும் அவர், இந்த திருத்த அறிவிப்பாணையின்படி, சர்வதேச கருத்தரங்குகள்,
விளையாட்டு நிகழ்ச்சிகளில் தனி இடத்தில் தான் மதுபானம் விநியோகிக்க வேண்டும்.
குறிப்பிட்ட அந்த பகுதியை தவிர வேறு இடங்களில் விநியோகிக்க கூடாது. அந்த இடங்களை பொதுமக்கள் பார்க்காத வகையில் மறைக்க வேண்டும் உள்ளிட்ட
நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, இந்த அறிவிப்பாணை பொது இடங்களில்
மதுபானம் அருந்துவது குற்றம் எனும் மதுவிலக்கு சட்டத்துக்கு விரோதமாக உள்ளதால், இந்த திருத்த அறிவிப்பாணையை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags :
Advertisement