இத்தாலியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு!
ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குள் செல்ல பெரும்பாலும் சட்ட விரோத பயணத்தையே மேற்கொள்கின்றனர். அவற்றில் பல பயணங்கள் ஆபத்தில் முடிகின்றது.
எனவே இதனை கட்டுப்படுத்த கடலோர போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையிலும் இந்த சட்ட விரோத பயணங்கள் தொடர் கதையாக உள்ளது. அந்த வகையில் வட ஆப்பிரிக்க நாடான துனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் துறைமுகத்திலிருந்து 56 அகதிகள் இறப்பர் படகில் மார்ச் 17 ம் தேதி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அப்போது பயணம் தொடங்கிய சில மணி நேரத்தில் அந்த படகில் ஓட்டை விழுந்து காற்று வெளியேறத் தொடங்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடலோர போலீசார் நடுக்கடலில் தத்தளித்த 4 பெண்கள் உட்பட 10 பேரை மீட்டு இத்தாலியின் தெற்கு பகுதியிலுள்ள லான்பெதூஸா தீவிற்கு அழைத்து செல்லப்பட்டு ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையகத்தின் முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாயமான 46 அகதிகளில் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மீதமுள்ள 40 பேரின் நிலை குறித்து எந்தவொரு தகவலும் தெரியவராத சூழலில் மீட்பு படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.