பொங்கல் பரிசாக சிவப்பு அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் - புதுச்சேரி அரசு அறிவிப்பு..!
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வரும் 4ம் தேதி, பொங்கல் பண்டிகை பரிசாக இலவச துணிக்கு பதிலாக ரூ. 1,000 வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி அரசு சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு இலவச துணிகள்
ஆண்டுதோறும் வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக இத்திட்டத்தின் கீழ் இலவச துணிக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப சிவப்பு அட்டைதாரர்களுக்கு ஒரு நபர் கொண்ட அட்டைதாரருக்கு ரூ.500 வீதமும், இரண்டிற்கு மேற்பட்ட குடும்ப நபர்களை கொண்ட அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வீதமும் வரும் ஜனவரி 4ஆம் தேதியன்று பயனாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் பொங்கல் பண்டிகையையொட்டி வறுமைகோட்டிற்கு கீழ் வசிக்கும் 1,30,791 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்துள்ளனர்.