கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை மையம் அறிவிப்பு!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே கேரளாவில் ஏற்கனவே கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மலப்புரம், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து நாளை மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கும்,16 ஆம் தேதி மலப்புரம், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கும், 17 ஆம் தேதி மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் மணிக்கு 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.