கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை!
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 11 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.
மேலும் மோசமான வானிலை காரணமாக, இடுக்கி, கண்ணூர், காசர்கோடு, திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர்கள் இன்று விடுமுறை அறிவித்துள்ளனர். அதேசமயம் கண்ணூர் பல்கலைக்கழகம் தவிர, பல்கலைக்கழகத் தேர்வுகள் மற்றும் பிஎஸ்சி(PSC) தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் 24 மணி நேரத்திற்குள் 120 மி.மீட்டருக்கு மேல் மழை பெய்யலாம். மேலும் 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மே 29 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.